திங்கள், 21 ஜனவரி, 2013

ஸீறதுன் நபியின் சிறப்புப் பண்புகள்




முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். அதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர் மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் தழுவிய வொன்றாக அவர்களின் வாழ்வு அமைந்திருப்பதைக் காண்பார். இந்த வகையிலேயே கடந்த பல நூற்றாண்டு காலமாக பல நூறு ஆய்வாளர்கள் நபியவர்களின் பன்முக ஆளுமையை பல் வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்துள்ளதைப் பார்க்கின்றோம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு தனக்கே உரிய பல தனிப் பெரும் சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றது.
  1. அது ஒரு திறந்த புத்தகமாக விளங்குகின்றது. நபிகளாரின் பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா தம்பதிகளின் திருமணம் முதல் நபியவர்களின் பிறப்பு, குழந்தைப் பருவம், இளமைக் காலம் உட்பட மேற் கொண்ட பயணங்கள் வரை அனைத்தம் மிகவும் துள்ளியமாக, ஆதாரபூர்வமாக பதியப்பட்டுள்ளன. இதனால் தான் சூரிய ஒளியில் பிறந்து வாழ்ந்த ஒரு வரலாற்றுப் புருஷர் என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு மேற்குலக வரலாற்றாசிரியர் வர்ணிக்கின்றார்.நபியவர்களின் உணவு, உடை, நடை, பாவனை அனைத்தும் மிக நுனுக்கமாக அவதானிக்கப்பட்டு வரலாற்றேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  2. உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வரலாறுகளில் இன்று வரை அழியாமலும் திரிக்கப்படாமலும் இடைச் செருகல்களில் சிக்காமலும் நம்பகமாகக் கிடைக்கின்ற ஒரு வரலாறு என்ற வகையிலும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு சிறப்பிடம் பெறுகின்றது.
  3. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதை இறைத்தூதைப் பெற்ற ஒரு மனிதனின் வரலாறாகவே எமக்குக் கிடைக்கின்றது. அவர்களை ஒரு தெய்வமாகவோ, தெய்வீகப் பிறவியாகவோ சித்தரிக்கும் முயற்சி அங்கே மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஒரு மனிதனாகப் பிறந்து ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழ்ந்துக் காட்டினார்கள். இதனால் தான் அன்னாரின் வாழ்வு அவர்களைப் பின்பற்றியவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ஒரு தெயிவீகப் பிறவியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் அவர்களை முழுமையாகப் பின்பற்றுவது சாத்தியமானதாக இருந்திருக்காது. இதனாலேயே அல்லாஹ்; நபியாகிய தான் ஒரு மனிதனே என்பதைப் பிரகடனம் செய்யுமாறு அவர்களை வேண்டியுள்ளான்.
    '(
    நபியே!), சொல்லுங்கள்: நிச்சயமாகவே நான் உங்களைப் போன்ற மனிதனே. எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றது.' (18:110) ஒரு மனிதன் என்ற காரணத்தினால் நபியவர்களின் வாழ்வில் எல்லா மனிதர்களுக்கும் முழுமையான முன்மாதிரி இருப்பதையும் அல்-குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது:
    'لقد كان لكم في رسول الله أسوة حسنة ......'
    '
    அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் நிச்சயமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது' (33:21)
  4. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு மனிதவாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவிய ஒருவரின் வாழ்வு என்ற வகையில் அதில் அனைத்து தரப்பினருக்கும் தேவையான வழிகாட்டல்களும் முன்மாதிரிகளும் உண்டு. ஓர் இளைஞன், கொள்கைவாதி, வழிகாட்டி, சீர்திருத்தவாதி, நாட்டின் தலைவர், கணவன், தந்தை, நண்பன் முதலான எந்நிலையில் இருப்பவருக்கும் நபியவர்களின் வாழ்விலிருந்து வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளலாம்.
  5. நபிகளாரின் சரிதை அவர்களின் நுபுவ்வத்திற்கு தெளிவான சான்றாதாரமாகவும் விளங்குகின்றது. ஸீராவைப் படிக்கும் ஒருவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதராகவே இருத்தல் வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு கொள்வார்.

வசந்தத்தின் வருகை






ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
'ரபீஉன்' என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉல் அவ்வலில்' பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும்,வெற்றியையும்,மகிழ்ச்சியையும்,மனநிறைவையும் கொண்டுவந்தார்கள்.
ஆன்மீக,லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவுகின்ற ஒரு காலம் இது. மீண்டும் ஒரு வசந்தத்தின் தேவையை- வருகையை இன்றைய பூமி அவசரமாக வேண்டி நிற்கின்றது. நிச்சயமாக அந்த வசந்தத்தை சுமந்துவரும் ஆற்றல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உண்டு. ஆனால் அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. மற்றுமொரு நபி வரப்போவதுமில்லை. எனினும் அன்னார் விட்டுச் சென்ற அல் குர்ஆனும் ஸுன்னாவும் பசுமையாக எங்களிடம் இருக்கின்றன. இன்றைய உலகின் வரட்சியைப் போக்கிடும் ஆற்றல் அவற்றுக்கு நிறைவாகவே  உண்டு. ஒருபுத்துலகை புதுப்பொழிவுடன் உருவாக்கும் தகுதியும் உண்டு.
ஆனால் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் மைந்தர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிலபோது விழித்துக் கொண்டாலும் அடிப்படைப் பணியை மறந்துவிட்டு வீண் வாதப் பிரதிவாதங்களிலும் அர்த்தமற்ற தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றனர். நபிகளார் பிறந்த இம்மாதத்தில் அன்னார் கொண்டுவந்த தூதுக்கு உயிரூட்டுவதை, அதனை உலகறியச் செய்வதை விட்டுவிட்டு அன்னாரை வைத்து வீண் சர்ச்சைகளைக் கிளப்பி குழப்பம் விளைவிப்பவர்களும் உண்டு. இதனால் எம் சமூகத்தில் எத்தனை, எத்தனைப் பிரிவுகள்,பிளவுகள் உருவாகியுள்ளன. இத்தகைய சர்ச்சைகளால் இஸ்லாம் அடைந்த பயன்தான் என்ன? நபிகளாரின் தூதுத்துவப் பணி கண்ட பிரயோசனம் யாது? இவ்வாறு நாம் சிந்திப்பதில்லை. சிலர் எம்மை சிந்திக்கவிடுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்தப் பிரச்சினைகளில் வாழ்க்கை நடாத்துபவர்கள்.
இனியும் இந்நிலை தொடர அனுமதிக்கலாகாது. நபிகளாரின் பெயராலேயே, அவர்களும் அவர்களின் வழிவந்த நல்லடியார்களும் கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூகத்தைத் தகர்க்கும், துண்டாடும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கக்கூடாது. சிறு சிறு சன்மார்க்க பிரச்சினைகளையெல்லாம் பூதாகரமான பிரச்சினையாக சித்தரித்து சமூகத்தைக் குழப்புவது ஒரு குற்றமும், பெரும் பாவமுமாகும் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். சமூக ஒற்றுமை காலத்தின் இன்றியமையாத தேவை என்பதை கள நிலவரத்தை அறிந்த எவரும் மறுக்கப் போவதில்லை.
வேறுபட்ட சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும் கொண்ட அமைப்புக்களும், முகாம்களும் இருந்துவிட்டுப்போகட்டும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் அவற்றின் போக்குகள் இருக்கும் வரை அவற்றை ஆட்சேபிப்பதற்கு இல்லை.  அவற்றின் நன்மைகளை சமூகம் பெறத்தான் வேண்டும். ஆனால் அமைப்புகளின்  பெயரால் இடம்பெறும் சண்டைகளுக்கும், மோதல்களுக்கும்; முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். உடன்படும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுப்புடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்வதற்குமான பக்குவமும் பண்பாடும் எல்லா மட்;டங்களிலும் வளர்க்கப்படல் வேண்டும். அமைப்புகளைக் கடந்த அகில இஸ்லாம் (Pn ஐளடயஅ) பார்வை எல்லா இயக்கங்கிளனதும் நிகழ்ச்சி நிரலில் முதன்மை அம்சமாக மாறுதல் வேண்டும். இப்புதிய இஸ்லாமிய கலாசாரத்தை நோக்கி சமூகத்தை அழைத்துச் செல்லும் கடப்பாடு எல்லா இஸ்லாமிய அமைப்புகளினதும் தலைமைகளுக்கு உண்டு. குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குறித்த கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் மிகப்பெரும் பங்களிப்பை செய்ய முடியும்; செய்தல் வேண்டும். இத்தகைய காத்திரமான முன்னெடுப்புக்களே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதுள்ள உண்மையானதும், அர்த்தமுள்ளதுமான அன்பின் வெளி;ப்பாடாக இருக்க முடியும்.
ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்