பக்கங்கள்

சனி, 22 டிசம்பர், 2012

மஸ்ஜித்களும் சமூகப் புனரமைப்பும்




                  

மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும். அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவை. மலக்குகள் தரிசனம் கொடுக்கும் தலங்களாகவும் அவை விளங்குகின்றன. இதனால்தான், 'பூமியில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடங்கள் மஸ்ஜித்களாகும், அவனுக்கு மிக வெறுப்புக்குரிய இடங்கள் சந்தைகளாகும்.' என்றார்கள் நபியவர்கள். (முஸ்லிம்)

இறையச்சம்மிக்க இறையடியார்களின் புகலிடமாகவும் மஸ்ஜித்களே விளங்குகின்றன. அல்லாஹ்வின் அருளையும் ஆன்மாவுக்கு பயிற்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் தேடுபவர்கள் ஒதுங்கும் இடம் மஸ்ஜிதாகவே இருக்க முடியும். எமது ஆரம்பகால இறைநேசர்கள் மஸ்ஜிதுடன் எத்தகைய இறுக்கமான உறவைக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிகின்ற போது எவரும் வியப்படையாமல் இருக்க மாட்டார்.
'
நாற்பது ஆண்டுகாலமாக பள்ளிவாயலுக்குச் சென்று ஒரு வேளை கூடத் தவராமல் நான் ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றி வந்திருக்கின்றேன்' என்று சொல்கிறார்கள் சஈத் இப்னு முஸய்யிப் (ரஹ்) அவர்கள். 'நான் கடந்த முப்பதாண்டு காலமாக முஅத்தின் அதான் சொல்லும்போதெல்லாம் பள்ளியிலேயே இருந்திருக்கின்றேன்' என்றும் அன்னார் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டர்கள்.

இறைவிசுவாசிகள் மஸ்ஜித்களுடன் நெருக்கமான தொடர்புடைய வர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 'ஒருவர் தனித்து வீட்டில் தொழுவதை விட மஸ்ஜிதுக்கு சென்று கூட்டாக நின்று தொழுவது இருபத்தேழு மடங்கு உயர்வானது' என்று சொன்னார்கள் நபியவர்கள்.
மறுமையில், மஹ்ஷரில், நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் பெறும் பேற்றைப் பெறும் ஏழு கூட்டத்தாரில் மஸ்ஜித்களுடன் இறுக்கமான உறவு கொண்டிருந்தோரும் அடங்குவர் என்பது பற்றி குறிப்பிடும் ஹதீஸும் இங்கு கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். (பார்க்க : புகாரி, முஸ்லிம்)

ஒருவர் மஸ்ஜிதுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருப்பது, அவர் ஓர் உண்மை விசுவாசி என்பதற்கு போதுமான சான்றாகும். இதுபற்றி குறிப்பிடும் நபிமொழி பின்வருமாறு:
'
ஒருவர் மஸ்ஜிதுடன் தொடர்புடையவராக இருப்பின் அவருடைய ஈமானுக்கு நீங்கள் சாட்சி கூறுங்கள்' (பார்க்க : திர்மிதி, இப்னு மாஜா)

இவ்வாறு மஸ்ஜித்கள் புனிதத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குவது போலவே, அவை முஸ்லிம் சமூகத்தின் நடைமுறை வாழ்வின் இதயமாகவும், அச்சாணியாகவும் காணப்படுகின்றன. ஏனெனில், சமூக நிர்மாணத்திற்கும், நிர்வாகத்திற்குமான கேந்திர நிலையங்களாக அமைவன மஸ்ஜித்களே.

இதனால்தான், நபியவர்கள் தான் விரும்பும் ஒரு கொள்கை வழிச் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் மதீனா நோக்கி பயணமான போது தான் செல்லும் வழியில் இடையில் தங்கிய இடமான குபாவில் கூட ஒரு மஸ்ஜிதை நிர்மாணித்தார்கள். மதீனா சென்றடைந்ததும் அன்னாரின் முதற்கட்ட பணியாக அமைந்ததும் மஸ்ஜித் நிர்மாணமே.
நபி (ஸல்) அவர்கள் மதீனா சமூகத்தை மஸ்ஜிதுந் நபவியை மையமாக வைத்தே கட்டியெழுப்பினார்கள். அன்று மஸ்ஜிதுந் நபவி வெறும் வணக்கங்கள் நிறைவேற்றப்படும் இடமாக மாத்திரம் இருக்கவில்லை. எல்லா சமூக பணிகளும் அங்குதான் நடைபெற்றன. அங்கிருந்தே அவை முடுக்கிவிடப்பட்டன.

மஸ்ஜிதுந் நபவி உட்பட இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மஸ்ஜிதுகள் ஆற்றிய பணிகள் எமது கவனத்திற்குரியவையாகும்.

கலாநிலையங்களாக மஸ்ஜிதுகள்

நபியவர்களி;ன் காலத்திலும் பிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் கல்விக்கூடங்களாக விளங்கின. மஸ்ஜிதுந் நபவியில் பல நபித் தோழர்கள் பாடம் நடாத்தி வந்தார்கள். அலி (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி) போன்ற நபித்தோழர்கள் மஸ்ஜிதில் கல்வி கற்றவர்களே. இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) தனது வகுப்புக்களை மஸ்ஜிதுந்நபவியில் வைத்தே நடாத்தி வந்தார்கள்.

எகிப்தின் கெய்ரோ நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉ அம்ரிப்னுல் ஆஸ் பள்ளிவாயலில் ஹி.36 அளவில் பாடப்போதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு 40 க்கும் அதிகமான கல்வி வட்டங்கள் இருந்தன. இமாம் ஷாபிஈ (ரஹ்), இமாம் இப்னு ஜரீர் அத்தபரீ (ரஹ்) போன்றோரின் வகுப்புகளும் இந்த மஸ்ஜிதில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய உலகில் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான அல்அஸ்ஹர் ஆரம்பத்தில் ஒரு மஸ்ஜிதாகவே இருந்தது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் எனும் இப்பள்ளிவாயல் ஹி. 361 அளவில் நிர்மாணி;க்கப்பட்டதாகும். டியூனீஸியாவில் அமைந்துள்ள அஸ்ஸெய்தூனா பல்கலைக்கழகமும் ஜாமிஉ ஸெய்தூனா என்ற மஸ்ஜிதில் இருந்தே உருவானதாகும்.

பக்தாதில் அப்பாஸிய கலீபா அபூ ஜஃபர் அல்மன்ஸூர் நிர்மாணித்த ஜாமிஉல் மன்ஸூரிலும் அக்காலத்து புகழ்பெற்ற பல அறிஞர்கள் பாடம் நடாத்தினார்கள். பேரறிஞர் அல்கதீபுல் பக்தாதி இங்கு ஹதீஸ் பாடம் நடாத்தினார்கள். இமாம் அல் கிஸாஈ அரபு மொழியையும், அபுல் அதாஹிய்யா கவிதையையும் கற்பித்தனர். டமஸ்கஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்ஜாமிஉல் உமவி பள்ளிவாயலிலும் பல்வேறுபட்ட கலைகள் போதிக்கப்பட்டன.

பொதுவாக மஸ்ஜித்களில் நடைபெற்ற வகுப்புகளில் மார்க்கப் பாடங்கள் மாத்திரமன்றி மொழி, இலக்கியம், இலக்கணம், கவிதை, வானவியல், கணிதம் போன்ற பல்வேறு கலைகள் போதிக்கப்பட்டன. இந்த உண்மையை கலாநிதி முஸ்தபா சிபாஈ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

மஸ்ஜித் பாடசாலையின் ஆரம்ப வித்தாக அமைந்தது. அது இபாதத்துக்குரிய இடமாக மாத்ததிரமன்றி முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வியையும், உலகக்கல்வியையும் போதிக்கும் கலையகமாகவும் விளங்கியது. 'அஞ்ஞான இருளில் இருந்த மேற்குலகிற்கு அறிவொளி பரப்பிய முஸ்லிம் ஸ்பெயினின்; அறிவியல் இயக்கத்திற்கு தொட்டிலாக, ஸ்பெய்னிய மஸ்ஜிதுகளே அமைந்தன என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.' இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கெய்ரோ ஜும்மா பள்ளிவாயலில் மாத்திரம் 110 வகுப்புகள் நடந்ததாக அறிஞர் அல்மக்திஸி குறிப்பிடுகின்றார்.

சனசமூக நிலையங்கள்

அகதிகள், அநாதரவானவர்கள், வீடற்றோர் முதலானோர் தங்குமிடமாகவும் மஸ்ஜிதுகள் விளங்கின. மஸ்ஜிதுந் நபவியில் தங்கியிருந்த திண்ணைத் தோழர்கள் அநாதரவானவர்களாகவும், வீடற்றவர்களாகவும் இருந்தவர்களே. மதீனாவுக்கு வந்த நஜ்ரான் கிறிஸ்த்தவ தூதுக்குழு நபியவர்களின் பணிப்புரையின் பேரில் மஸ்ஜிதுந்நபவியில் தங்குவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டமை, அன்று மஸ்ஜித் விருந்தினர் விடுதியாகவும் விளங்கியிருந்தது என்பதற்கு போதுமான சான்றாதாரமாகும். மற்றொரு சந்தர்ப்பத்தில் மதீனாவுக்கு வருகைத்தந்த ஒரு தூதுக்குழு மஸ்ஜிதுந் நபவியில் தங்கவைக்கப்பட்டதோடு அவர்களைக் காவல் புரியும் பணியில் உமர் (ரழி) அவர்கள் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது. பிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் பிரயாணிகள், விருந்தினர், ஏழைகள் முதலானோருக்கு புகலிடங்களாக விளங்கியமை பற்றி உலகப் பயணிகளான இப்னு ருஷ்த், இப்னு பதூதா, இப்னு ஜுரைர், அல்மக்திஸி போன்றோர் குறிப்புகளை தந்துள்ளனர்.

ஸகாத், ஸகாதுல் பித்ர் முதலான வரிகளும், தர்மநிதிகளும் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கின்ற இடங்களாகவும் மஸ்ஜிதுகள் இருந்து வந்துள்ளன. வரலாற்றில் பல மஸ்ஜிதுகள் நீதிமன்றங்களாகவும், ஆலோசனை மன்றங்களாகவும் செயற்பட்டுள்ளன. நீதிபதிகள் அரச தலையீடு ஏதுமின்றி பொதுமக்களின் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவார்கள். நீதிபதிகளான ஷுரைஹ், மர்வான் போன்றவர்கள் பள்ளிவாயல்களிலேயே வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள். எகிப்தில் அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களினால் புஸ்தாத் நகரத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட காழி கைஸ் பள்ளிவாசலையே தனது நீதிமன்றமாக அமைத்துக் கொண்டார். உஹத், அஹ்ஸாப் முதலான யுத்தங்களின் போது கலந்தாலோசனைகள் மஸ்ஜிதுந் நபவியிலேயே இடம்பெற்றன.

அன்று மஸ்ஜிதுகளில் யுத்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. யுத்தத்திற்கான முன் ஆயத்தங்களும் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டன. யுத்தங்களில் காயப்பட்டவர்களுக்கு மஸ்ஜிதுகளில் வைத்து சிசிச்சை அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அகழி யுத்தத்தின் போது காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மஸ்ஜிதில் ஒரு விஷேட கூடாரம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
பொதுவாக முஸ்லிம் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மஸ்ஜிதுகளில் அமர்ந்து சிகிச்சையளிக்கும் வழமை இருந்து வந்துள்ளது. பெரும்பாலும் மஸ்ஜிதுகளில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இங்கு மருந்துகளை வைப்பதற்கான பிரத்தியேக இடங்களும் காணப்பட்டன. ஸ்பெயினின் குர்துபா பெரிய பள்ளிவாயல் ஒரு மருத்துவ மனையாகவும் செயற்பட்டது.

தொடர்பாடல் மையங்கள்

சமூகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களும், செய்திகளும் மஸ்ஜிதுகளுக்கூடாகவே வழங்கப்பட்டன. இஸ்லாத்தின் தூதை முன்வைக்கும் இடங்களாகவும் அவை இருந்து வந்தன. உரைகள், பிரசங்கங்கள், உரையாடல்கள், கவியரங்கங்கள், விவாதமேடைகள் முதலானவை மஸ்ஜிதுகளில் பரவலாக இடம்பெற்றன. இவற்றுக்கூடாக இஸ்லாத்தின் தூது முன்வைக்கப்பட்டது. சாபித் பின் கைஸ், ஹஸ்ஸான் பின் சாபித் பேன்ற இஸ்லாமிய கவிஞர்கள் அந்நிய கவிஞர்களுடன் போட்டிக்கு கவிதைகள் பாடி அவர்களை இஸ்லாத்தின் பால் கவர்ந்த நிகழ்வுகளும் மஸ்ஜிதுந் நபவியில் இடம் பெற்றன.

அன்று மஸ்ஜிதுகள் எவ்வாறு சமூகத்தின் பல்துறைசார்ந்த தேவைகளை நிறைவேற்றி வந்தன என்பது பற்றி இமாம் இப்னு தைமியா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'இஸ்லாமிய அறிஞர்கள் அமரும் இடங்களாகவும், சமூகத்தின் கழகங்களாகவும் மஸ்ஜிதுகளே விளங்கின. நபியவர்கள் தனது புனிதப் பள்ளிவாயலை தக்வாவின் அடிப்படையில் நிர்மாணித்தார்கள். அங்கு தொழுதல், ஓதுதல், திக்ரு செய்தல், கற்றல், கற்பித்தல் உரைநிகழ்த்துதல் முதலான அனைத்தும் நடைபெற்றன. அரசியல் தலைவர்கள், தளபதிகள் நியமணம், அறிமுகங்கள் எல்லாம் நடந்தன. முஸ்லிம்கள் தமது உலக, மறுமை தொடர்பான எல்லா விவகாரங்களுக்காகவும் அங்குதான் கூடினார்கள்'

மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை

மஸ்ஜிதுகளின் வரலாற்று புகழ்மிக்க பங்களிப்புகளும், பணிகளும் இன்று வெறுமனே ஏட்டளவில் காணப்படும் வரலாற்றுச் சம்பவங்களாக மாறிவிட்டன. இன்றைய மஸ்ஜிதுகள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்திருக்கின்றன. நிதி, நீதி, நிர்வாகம் உற்பட முஸ்லிம் சமூகத்தின் அனைத்து துறைகளுக்கும் மையமாக விளங்கிய மஸ்ஜித் இன்று வணக்க வழிபாடுகளுடனும் சில சிறிய அளவிலான செயற்பாடுகளுடனும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. மஸ்ஜித்களின் இவ்வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை குறிப்பிட முடியும். காலனித்துவ வாதிகள் மஸ்ஜிதுகள் முஸ்லிம் சமூகத்தில் வகிக்கும் இடத்தை நன்கு புரிந்து கொண்டனர். அவை தொடர்ந்தும் அவற்றின் செயற்பாடுகளை செய்து வந்தால் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவது என்பது அசாத்தியமானது என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். இந்த வகையில் மஸ்ஜிதுகள் என்பவை வணக்கஸ்தளங்களே அன்றி சமூக விவகாரங்களை மேற்கொள்வதற்கான இடமல்ல என்ற கண்ணோட்டம் திட்டமிட்ட அடிப்படையில் வளர்க்கப்பட்டது. காலப்போக்கில் இக்கண்ணோட்டம் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியதன் விளைவாக மஸ்ஜிதுகளின் வரலாற்றுப் பங்களிப்பு படிப்படியாக குறைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.

ஆயினும், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகளாவிய ரீதியில் உருவான இஸ்லாமிய எழுச்சியின் விளைவாக, மஸ்ஜிதுகளும் முஸ்லிம் சமூகத்தில் அவை பெற்றிருந்த இடத்தை மீண்டும் பெறும் நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கும் இந்நாட்டில் அமைந்துள்ள மஸ்ஜிதுகளையும் செயற்திறன் மிக்க சமூகமையங்களாக மாற்றுவதற்கு ஆவணம் செய்தல் காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும்.

எமது பள்ளிவாயல்களை செயற்திறன்மிக்கவையாக மாற்றுவதில் பள்ளிவாயல்களின் பரிபாலன சபைகளின் பங்கு மகத்தானதாகும்.

பள்ளி பரிபாலணம்

முதலில் இறை இல்லங்களை பரிபாலனம் செய்வது எத்தகைய பொறுப்பான பணி என்பதையும் உயர்ந்த அமல் என்பதையும் நிருவாகிகள் புரிந்து கொள்ளல் வேண்டும். மஸ்ஜிதுகளை நிர்மாணிப்பதும், பரிபாலிப்பதும் நேர்வழிப் பெற்ற சிறந்த முஃமின்களின் பண்பாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 9:18)
இவ்வுலகில் ஓர் இறை இல்லத்தை நிர்மாணிப்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஓர் இல்லத்தை நிர்மாணிக்கின்றான் என்ற நபிவாக்கும் இங்கு நினைவு கூறத்தக்கதாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு கருப்பின பெண் இருந்தாள். பள்ளிவாயலை கூட்டி சுத்தம் செய்வது அவளது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் அவளை காண முடியவில்லை. இதனை அவதானித்த நபியவர்கள் அவளைப்பற்றி விசாரித்தார்கள். அவள் இறந்து விட்டதாக அன்னாருக்கு தெரிய வந்தது. 'அவள் இறந்த செய்தியை அப்போதே நீங்கள் எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?' என்று தோழர்களை விழித்துக் கூறிய நபியவர்கள் அவளது கப்ரை தரிசித்து அவளுக்காக தொழுகையையும் நிறைவேற்றினார்கள். (புகாரி, முஸ்லிம்). 'நான் அப்பெண்ணை சுவனத்தில் பார்த்தேன்'|என்று நபியவர்கள் சொன்னதாக குறிப்பிடும் ஓர் அறிவிப்பு முஃஜமுத் தபரானியில் பதிவாகியுள்ளது. இது மஸ்ஜிது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் சிறப்பை எடுத்துச் சொல்ல போதுமான ஆதாரமாகும்.

மஸ்ஜிதுகளை நிர்வகிப்பது ஒர் உயர்ந்த அமலாக இருப்பது போலவே ஒரு பெரிய பொறுப்பு என்பதையும் மேலே குறிப்பிட்டோம். இந்த வகையில் தகுதியுடையவர்கள் பரிபாலண சபையில் இருக்கின்ற போதே ஒரு பள்ளிவாயல் அதன் பணியை செவ்வனே நிறைவேற்ற முடியும். பரிபாலண சபைக்கு நியமிக்கப்படுவோர் அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் பரிபாலணத்திற்குரிய தன்மைகளையும் தகைமைகளையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.

''
அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலணம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழிப்பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே'' (அல்குர்ஆன் 9:18)

பள்ளிகளும் பணிகளும்

நம்நாட்டு பள்ளிவாயல்களும் அவற்றுக்குரிய வரலாற்றுப் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கு பரிபாலண சபைகள் முனைப்புடன் செயற்பட கடமைப்பட்டுள்ளன. இலங்கை, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு நாடு. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்து வந்த போதிலும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை சொல்லத்தவறி விட்டோம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். இப்போது இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் சர்வதேச மட்டத்திலும் ஏன் உள்நாட்டு மட்டத்திலும் கூட பிழையான கருத்துக்கள் பரவலாக உருவாகியுள்ளன. இந்நிலையில் உண்மை நிலையை முஸ்லிமல்லாதாருக்கு புரியவைப்பதற்கும் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதற்கும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதற்கும் உரிய இடங்களாக மஸ்ஜிதுகள் காணப்படுகின்றன. எனவே, முஸ்லிமல்லாதார் எமது மஸ்ஜிதுகளுக்கு வருவதற்கும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளை அறிவதற்கும் வழிசெய்வது சமூகத்தின் முன்னால் உள்ள மிகப் பெறும் கடமையாகும்.

இன்று அமெரிக்கா, பிரித்தானியா முதலான மேற்குலக நாடுகளிலும் பஹ்ரைன் போன்ற சில மத்திய கிழக்கு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதாருக்கான தஃவாவை முன்வைப்பதில் சில மஸ்ஜிதுகள் முன்னணியில் நின்று இயங்கி வருகின்றன. மஸ்ஜிதை பார்வையிட வருபவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் தேவையான விளக்கங்களை வழங்கவும் இப்பள்ளிவாயல்களில் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாம் பற்றிய நூல்களையும் பிரசுரங்கங்களையும் பெற்றுக்கொள்வதற்கு இங்கு விஷேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக செப்டம்பர் 11 அசம்பாவிதங்களைத் தொடர்ந்து இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உருவான பிழையான கருத்துக்களை போக்குவதிலும் பலரை இஸ்லாத்தின் பால் கவர்வதிலும் இவை பெரும் பணியாற்றி வருகின்றன.

முஸ்லிமல்லாதாரை பள்ளிகளில் நுழைய அனுமதிப்பதில் முஸ்லிம்கள் மத்தியில் நீண்ட காலமாகவே ஒருவகை தயக்கம் இருந்துவருகின்றது. ஆனால் அவர்கள் அவ்வாறு பள்ளிவாயல்களை பார்வையிட இஸ்லாத்தில் எவ்வித தடையும் இருப்பதாக தெரியவில்லை. முஸ்லிமல்லாதாரை மஸ்ஜிதுகளில் நுழைய அனுமதிக்கலாம் என்பதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஆதாரமாக கொள்ளப்படுகின்றது.

''
மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் எவரேனும் (நபியே) உம்மிடம் அபயம் தேடினால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக, பின்னர் அவருக்கு அபயமளிக்கும் வேறு இடத்தில் அவரை சேர்த்து வைப்பீராக. ஏனெனில் அவர்கள் அறியாத சமூகத்தவர்களாய் இருக்கின்றனர்.'' (9:6)

முஸ்லிம்கள் பனூஹனீபா கோத்திரத்தை சேர்ந்த அடிமை ஒருவரைக் கைதியாக நபியவர்களிடம் கொண்டு வந்த போது அவரை பள்ளிவாயல் தூண் ஒன்றில் மூன்று நாட்களுக்கு கட்டி வைக்குமாறு அன்னார் பணித்தார்கள். அவர் முஸ்லிம்களின் வணக்க முறைகளையும் பண்பாடுகளையும் பார்க்க வேண்டுமென்பதே நபியவர்களின் நோக்கமாக இருந்தது. அக்கைதிக்கு பள்ளியிலேயே உணவு வழங்கப்பட்டது. ஏனைய தேவைகளை நிறைவேற்றவும் ஒழுங்குகள் செய்யப்பட்டன. மூன்று நாட்களின் பின்னர் அவர் அவிழ்த்து விடப்பட்ட போது இஸ்லாத்தினால் கவரப்பட்டிருந்த அவர் ஷஹாதத்தை மொழிந்து இஸ்லாத்தை தழுவினார்.

நஜ்ரான் கிறிஸ்த்தவ தூதுக் குழுவை நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் வைத்து வரவேற்றதோடு அங்குதான் அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடாத்தினார்கள். அவர்களது வணக்க நேரம் வந்த போது நபியவர்கள் தனது மஸ்ஜிதிலேயே ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்கியும் கொடுத்தார்கள்.

இலங்கையைப் பொருத்தவரையில் குறைந்த பட்சம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதான நகரங்களில் பள்ளிவாயல்களை முஸ்லிமல்லாதார் வந்து பார்வையிட ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். குறிப்பாக பாடசாலை மாணவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இப்பள்ளிவாயல்களை தரிசிக்க ஆவணம் செய்யப்படல் வேண்டும். இது இஸ்லாத்தின் தூதை அவர்கள் இலகுவில் புரிந்து கொள்ள வழிசெய்வதோடு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கவும் பேருதவியாக அமையும்.

மேலும் தற்கால மஸ்ஜிதுகளின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம் அவற்றின் பங்களிப்பை செயற்திறன் மிக்கதாக அமைத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் மஸ்ஜித் நிர்வாகிகள் பள்ளிவாயலை மையமாகக் கொண்டு மேற்கொள்ளக் கூடிய சில முக்கிய பணிகளை கீழே தருகின்றோம்.

   1.
பள்ளிவாயலை சார்ந்து நடைபெறும் மத்ரஸாவில் அல்குர்ஆன், சன்மார்க்க போதனைகளுடன் நடைமுறைக் கல்வியுடன் தொடர்பான வகுப்புகளையும் நடாத்த ஒழுங்கு செய்தல்.
   2.
நூல்; நிலையம் அமைத்தல்.
   3.
பெண்களுக்காக பள்ளியில் பிரத்தியேக இடம் ஒதுக்குதல்.
   4.
சமூகத்தில் உருவாகும் பிணக்குகளையும் சர்ச்சைகளையும் பள்ளியில் தீர்த்து வைக்க வழிசெய்தல்.
   5.
நிவாரண உதவிகள், சமூக சேவைகளுக்கான மையமாக இயங்குதல்.
   6.
வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதல்.
   7.
சமூக நல திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.
   8.
ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.
   9.
இமாம்கள், கதீப்மார்களை பயிற்றுவிக்க ஒழுங்கு செய்தல்.
  10.
குத்பாக்களை செயற்றிறன்மிக்கதாக அமைத்து கொள்ள ஆவணச் செய்தல்.
  11.
முஸ்லிமல்லாதோர் பள்ளிவாயலை வந்து பார்வையிடவும் தேவையான விளக்கங்களை பெறவும் உரிய ஏற்பாடுகளை செய்தல்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை ஒரு மஸ்ஜிதில் மேற்கொள்வதற்கு மஸ்ஜிதின் கட்டட அமைப்பிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இந்தவகையில் நூலகம், மாநாட்டு மண்டபம், வகுப்பறைகள், வரவேற்பறை முதலான பகுதிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும். இன்று உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்ற மஸ்ஜிதுகளில் இப்பகுதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதை காணமுடியும். சுருங்கச் சொல்லின் ஒவ்வொரு பள்ளிவாயலும் இஸ்லாமிய சனசமூக நிலையமாக (ஐளடயஅiஉ ஊழஅஅரnவைல ஊநவெசந) இயங்க வழிவகைகள் செய்யப்படுவதன் மூலமே மஸ்ஜிதுகளின் உயிரோட்டம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவது சாத்தியப்பட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக